Saturday, October 24, 2009

விரைவில்.....

அன்று சென்ற அதே சாலையில்
இன்றும் சென்றேன்
என்றோ பதியப்பட்ட நிகழ்வு
இன்றும் என்னுள்(டன்) பயணித்தது
நடந்து செல்லும் பாதங்களின்
சப்தங்களில் உன்னை தேடுகிறேன்
மறந்துவிட்டேனோ?
தேடும் படியாக
ஆகிவிட்டதா நம் காதல்...

தத்தி தத்தி நடக்கும் குழந்தைபோல்
நம் காதல் மீண்டும் ஆரம்பித்தது
சில இடங்களில் விழுந்தாலும் எழுந்து நடந்தது
அன்று போல் யாருக்கும் பயமில்லை இன்று
நீயும் கூட பயப்படவில்லை ஆச்சரியம் தான்

ஒவ்வொரு முறையும் உனை நினைக்கையில்
நீ காட்டிய ஜாடைகள் தான் வந்து செல்லும் என்றேன்
வலிக்கும் வண்ணம் ஒரு அறை விட்டாய்
நிலைகுழைந்தேன் எதிர்பாரா தாக்குதலில்
வலியுடன் ஏனென்று ஏறெடுத்துப்பார்க்கையில்
அதே கோபம் குறையாமல் கேட்டாய்
"தினமும் எண்ணிக்கை முறையில் தான் நினைக்கிறாயா" என்று
சிரிப்புடன் வாங்கிகொண்டேன் உன் மற்றொரு அறையையும்
பிறகு கிடைக்கும் முத்ததிற்காக

என்றோ நடந்தவைகளை இன்றைய செய்தி போல் வாசித்தாய்
நானும் ரசித்தேன் செய்தியையும் செவ்விதழ்களையும்
ஒவ்வொரு நிகழ்விற்கும் ஓரு கவிதை சொன்னாய்
சில நிகழ்வில் நம் காதல் மலர்ந்ததை நினைத்து வருத்தப்பட்டேன்
உன் கவிதைகளுக்காக
பேசினாய் பேசினாய் நீ மட்டுமே
நான் பலவிசயங்களுக்கு ரசிகனாகிப்போனேன் உன்னிடம்

நேரம் குறையத்தொடங்கியதும் அதே குழந்தை தனம் உன்னிடம்
செல்ல வேண்டும் என்பது மட்டும் ஒலிபரப்பினாய்
அது கூட அழகாய் இருந்தது

இறுதியாய் நீ கேட்ட கேள்வி
மீண்டும் எப்பொழுது வருவாய் ?
எப்பொழுது என்னுடன் முழுதாய் வருவாய்?

உன்னிடம் உதிர்த்த பதில்கள் உரக்க ஒலிக்கிறது
விரைவில்.....

No comments:

Post a Comment

நண்பர்களின் கருத்துக்கள்